தெலங்காணா கலைஞர்களுக்கு பத்ம விருதுகள்!

Published:

padma awards - 2026
  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

குடியரசு தினத்தன்று தெலங்காணாவைச் சேர்ந்த மூவருக்கு பத்மஸ்ரீ விருதும் ஒரு தம்பதியினருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கின்னெரா கலைஞர் தர்ஷனம் மொகிலய்யா, குச்சிப்புடி கலைஞர் பத்மஜா ரெட்டி, நாட்டுப்புற கலைஞர் ராமச்சந்திரய்யா மூவரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள்.

தர்ஷனம் மொகிலய்யா:-

மஹபூப்நகரைச் சேர்ந்த 70 வயதான தர்ஷனம் மொகிலய்யா ஐந்தாம் தலைமுறை கின்னெரா மேஸ்ட்ரோ. இவர் தனது குடும்ப பாரம்பரியமான இசைக்கருவி வாசிப்புக் கலையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.  கின்னெரா என்பது 12 கம்பிகளைக் கொண்ட இசைக்கருவி. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வனபர்த்தி மன்னரின் அவையில் மொகிலய்யாவின் முன்னோரால் வாசிக்கப்பட்டது. மொகலய்யா நாகர்கர்னூல் மாவட்டம் லிங்கால மண்டலம் அவுசலிகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். 12 கம்பிகள் கொண்ட கின்னெராவை வாசிக்கும் கடைசி தலைமுறை கலைஞரான இவர், “கின்னெரா இசைக் கலை மிக அற்புதமானது. இந்தக் கலை என்னோடு முடிந்து விடுமோ என்று கவலைப்பட்ட நேரத்தில் பத்மஸ்ரீ விருது வந்ததன் மூலம் இந்த பழங்காலக் கலைக்கு உயிர் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த இசைக்கருவியை அனைவரும் அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இசைக்கருவியின் பெயரே எங்கள் குடும்பப் பெயராக மாறிவிட்டது. அனைவரும் என்னை கின்னெர மொகிலய்யா என்றழைக்கின்றனர்” என்றார்.

telangana darshnam - 2026

ஏழ்மையில் வாடிய கின்னெரா கலைஞர்:-

ஆனால் இந்த இசைக் கலைஞரின் வாழ்க்கை எளிமையானதாக அமையவில்லை. பன்னிரண்டு மெட்டுகள் கொண்ட கின்னெரா இசைக்கருவியைக் கையில் பிடித்து ஊரூராக அலைந்து ஒரு புறம் இந்த அரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு மறுபுறம் தன் குடும்பத்தையும் போஷித்து வருகிறார். பாரம்பரியமான தெலுங்கு மக்களின் கிராமீய வாழ்வியலையும் வரலாற்று கதைகளையும் கின்னெரா மெட்டுகள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். “எத்தனை சிரமம் வந்தாலும் தன் இசைக்கருவியை கீழே வைக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தார் மொகிலய்யா. தற்போது இந்திய அரசாங்கமே இவருடைய பெருமையை உணர்ந்து இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்துள்ளது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

தெலங்காணா மாநிலம் தொடங்கிய நாளன்று மொகிலய்யாவை அரசு கௌரவித்தது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்தக் கலையை வளர்க்கவும் மொகிலய்யாவின் திறமையை உலகம் அறியவும் இந்த கின்னெரா இசைக் கருவியை எட்டாம் வகுப்பில் ஒரு பாடமாக கேசிஆரின் தெலங்காணா அரசு சேர்த்தது. 

telangana mogulaiah - 2026

அந்த கௌரவங்கள் எந்த வழியிலும் மொகிலய்யாவின் ஏழ்மையைப் போக்கவில்லை. குடும்பத்தின் வயிறு நிறையவில்லை. கலைஞர்களின் பென்ஷனுக்காக விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. இவருடைய மனைவி மரணித்தார். இரு மகள்களுக்கு திருமணம் செய்வித்தார். மொகிலய்யாவின் பெரிய மகன் ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்து கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இரண்டாம் மகன் உடல்நலம் சரியில்லாதவர். மாதம் நான்காயிரம் ரூ மருத்துவத்திற்கு செலவாகிறது. கின்னெரா இசைக்கருவி நிகழ்ச்சி மூலம் குடும்பத்தை காப்பற்றி வந்த இந்த கலைஞருக்கு கொரோனா பரவல் மூலம் வருமானம் இல்லாமல் போனது.

தன்னைப் பற்றி பாடப் புத்தகத்தில் வந்துள்ளது என்பதைக் காண்பித்து பலரிடமும் யாசிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த கலைஞரின் நிலையைப் பார்த்து நடிகர் பவன் கல்யாண் ‘பீம்லா நாயக்’ என்ற திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு அளித்தார். அதன் பின்னர் இவர் நிலையை அறிந்து பலர் உதவிக்கு வந்தனர். அரசாங்கம் கலைஞர்களுக்கான பென்ஷனாக பத்தாயிரம் ரூபாய் அளித்தது. தற்போது இவர் திடீரென்று நட்சத்திரமாக மாறிவிட்டார். பிலபல டிவி சேனல்கள் இவரை நேர்காணல் செய்து வருகின்றன.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

குச்சிப்புடி நடனக் கலைஞர் பத்மஜா ரெட்டி:-

குச்சிப்புடி நடனக் கலைஞர் கட்டம் பத்மஜா ரெட்டி 1967 ஏப்ரல் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ருவில் பிறந்தார். தாயார் ஸ்வராஜ்யலட்சுமி. தந்தையார்
ஜிவி.ரெட்டி ஒரு மருத்துவர். பத்மஜா ரெட்டி நிஜாமாபாத் முன்னாள் எம் பி. ‘கேஸ்பல்லி’ (கட்டம்) கங்கா ரெட்டியின் மருமகள். இவர் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் குச்சிபுடி நடன நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

telangana padmaja reddy - 2026

நிருத்திய விசாரதா, கல்கி களாகார் மற்றும் சங்கீத நாடக விருதுகள் பல பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது பெறும் முதல் பெண் கலைஞராக பெருமை பெற்றுள்ளார். காகதீயம் என்று அழைக்கப்படும் மறக்கப்பட்ட பழங்கால நடன வடிவத்தை புதுப்பித்துள்ளார்.  இந்த நடனக் கலை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு காகதீய மன்னர்களின் ஆட்சியின் போது பிரபலாமாக விளங்கியது.  பத்மஜா ரெட்டி காகதீயம் நடனத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். வாரங்கல் ராமப்பா கோவில் சிற்பங்களின் நடன வடிவம் தொடர்பான இலக்கியங்களை ஆராய்ந்தார்.

டோலு இசைக் கலைஞர் ராமசந்திரய்யா:-

பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டம் மணுகூரு மண்டலம் கூனவரம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிக் கலைஞர் ‘சகினி’ ராமசந்திரய்யா (62). இவர் எஸ்டி கோயா சமூகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகர். மலைவாழ் பழங்குடிகளின் வனதேவதைகளான சம்மக்கா, சாரலம்மாவின் வரலாற்றை மையமாகக் கொண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.

telangana ramachandraiah - 2026

டோலு இசைக்கருவியின் (கஞ்சுமேளம், கஞ்சுலாட்டம்) உதவியோடு ‘கோய’ மொழியில் அற்புதமாக வர்ணித்துப் பாடுவார். கோயர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் எடுத்து வரவேண்டும் என்று முனைந்து 2015ல் ஒரு அதிகாரியின் உதவியோடு ‘தோகுகூடெம்’ என்ற இடத்தில் ஐந்து பல்கலைகழக பேராசிரியர்களின் தலைமையில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தினார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பத்ம பூஷன் விருது:-

தெலங்காணாவில் கிருஷ்ணா ‘எல்லா’ மற்றும் சுசித்ரா ‘எல்லா’ இருவரும் கூட்டாக பத்ம பூஷன் விருதைப் பெறுகிறார்கள்.

கிருஷ்ணா எல்லா (52) அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரிசரச் ஃபேகல்டியாக பணியாற்றினார்.  மனிதகுலம் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு தடுப்பூசி போடுவதே தீர்வு என்று அவர் நம்புகிறார். இந்த நேரத்தில்தான் அவரும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டின் மீது அன்புகொண்டு இந்தியா திரும்பினர். 

telangana krishna suchitra - 2026

மனைவி சுசித்ரா எல்லாவோடு சேர்ந்து 1996ல் ஹைதராபாதில் ‘பாரத் பயோடெக்’ நிறுவத்தைத் தொடங்கினார். ஹெபடைடிஸ் பி தடுப்பூசியில் தொடங்கி பல நோய்களுக்கு தடுப்பூசி வெளிக்கொணர்ந்தார்.

குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்கான கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்குவதில் அவர் எடுத்த முயற்சி அரசாங்கத்துடன் இணைந்து அவர் மேற்கொண்ட பணி மற்றும் ICMR, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி விஞ்ஞானிகளுடன் குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு முன் சென்ற அணுகுமுறை ஆகியவை தடுப்பூசியின் விரைவான கண்டுபிடிப்புக்கு பங்களித்தன.  இந்த ஜோடி பத்ம பூஷன் விருதுக்கு கூட்டாக பரிந்துரைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.


  •  
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img