ஐபிஎல் 2022 – ராஜஸ்தான் vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன் –
ஏப்ரல் இருபத்தியாறாம் நாள் ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கிடையே புனே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 39ஆவது போட்டி நடந்தது. ராஜஸ்தான் அணி (144/8, ரியான் ப்ரக் 56*, சஞ்சு சாம்சன் 27, அஷ்வின் 17, சிராஜ், ஹேசல்வுட், வனிந்து தலா 2 விக்கட்) பெங்களூரு அணியை (115 ஆலவுட், குல்தீப் சென் 4/20, அஷ்வின் 3/17, ப்ரசித் கிருஷ்ணா 2/23) தோற்கடித்தது.
இது ஒரு குறைவான் ரன்கள் அடிக்கப்பட்ட ஒரு மேட்ச். டாஸ் வென்ற பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்ததால் அஷ்வின் விளையாட வந்தார். இவ்வாறு ராஜஸ்தான் அணி இரண்டாவது முறை செய்கிறது. முதல் முறை இந்த மாற்றம் எந்த பலனையும் தரவில்லை.
அஷ்வின் 9 பந்துகள் விளையாடி, நாலு ஃபோர் அடித்து 17 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார். சாம்சன் (27 ரன்), மிட்சல் (16 ரன்) எடுத்தனர். ஆனால் ரன்ரேட் வெகுவாகக் குறைந்து போனது. ரியான் பரக் நாலு சிக்ஸ், 3 ஃபோருடன் 56 ரன் எடுத்து, அணியின் ஸ்கோரை 144 வரை கொண்டு சென்றார். 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி ஆடவந்தது.
பெங்களூரு அணியில் இன்று அனுஜ் ராவத் விளையாடவில்லை. விராட் கோலி தொடக்க வீரராக இறங்கினார். 10 பந்துகள் ஆடி, 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பெங்களூரு அணியின் ஒரு பேட்ஸ்மென் கூட சரியாக விளையாடவில்லை. அதிரடி ஆட்டக்காரர்களான ப்ளேசிஸ், மேக்ஸ்வல், தினேஷ் கார்த்திக் மூவரும் இன்றும் சரியாக ஆடவில்லை. பெங்களூரு அணியால் 115 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
எனவே அந்த அணி 29 ரன் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. ரியான் பராக் (56* ரன், நாலு கேட்ச்) ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் (12 புள்ளிகள்), குஜராத் (12), சன்ரைசர்ஸ் (10), லக்னோ (10), பெங்களூரு (10) ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.