எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை சார்பில் திருச்சியில் நடைபெற்ற ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டத்தினை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்த வழித்தடத்திற்கு முதலீட்டை எடுத்து வரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்! எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார்… என்று பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் நேருக்கு நேர் பதிலளித்துக் கொண்டிருக்கையில் அதனை காங்கிரஸார் கவனிக்காமல் இருந்துவிட்டு இப்போது எனது பதிலில் திருப்தி இல்லை என்று கூறுகின்றனர்… இதை ஏற்க முடியாது என்று கூறினார்.