பிடிபட்ட இந்திய விமானியை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்துங்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டுள்ளன.
பிடிபட்டுள்ள இந்திய விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் ஃபாத்திமா பூட்டோ உள்பட பாகிஸ்தானியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு இந்திய விமானியை ஏதோ தீவிரவாதியை நடத்துவது போல் பாகிஸ்தான் நடத்தியுள்ளது வேதனையை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், இது பாகிஸ்தானுக்கு மேலும் அவப்பெயரைத் தரும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் ஃபாத்திமா பூட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்திய விமானி பிடிப்பட்டதை தைரியமாகவும் ஒளிவு மறைவின்றியும் பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டதை நான் பெருமையாக கருதுகிறேன். அதே வேளை அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
பாகிஸ்தான் கஸ்டடியில் உள்ள இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும் என பாகிஸ்தானில் பலரும் குரல் கொடுத்து வருவதை கவனத்தில் கொள்ளுங்கள். போரே வேண்டாம் என கருதும் நாம் அனைவரையும் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்திரிகையாளர் மன்சூர் அலிகான் தனது டுவிட்டர் பக்கத்தில், பணியில் இருக்கும் விமானிக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். பிடிப்பட்ட இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும். வீரத்துக்கு மதிப்பு கொடுக்கும் நாடு பாகிஸ்தான் என கூறியுள்ளார்.
ஹாசன் ஹுசைன் குரேஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பிடிபட்ட இந்திய விமானிக்கு சிறந்த மருத்துவ உதவி, உணவு வழங்கப்பட வேண்டும். அவரை மரியாதையாகவும் கவுரவமாகவும் நடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அவருக்கு கொடுத்த பணியை செய்தார் அவ்வளவே என்று கூறியுள்ளார்.