தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்கும்படி, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, தேர்தல் ஆணையம், ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது.
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, வி.ஹெச்.பி., எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில தலைவர் ராமா ராஜு, தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், ‘ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், மக்களிடையே ஜாதி, மத உணர்வுகளை துாண்டிவிட்டு, மோதல் ஏற்படும் வகையில், முதல்வர் பேசினார்’ என, கூறியிருந்தார்.
இந்த புகாருக்கு இரு நாட்களுக்கு பதில் அளிக்கும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, தேர்தல் ஆணையம், ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது. ‘பதில் அளிக்காவிட்டால், எந்தவித முன் அறிவிப்புமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும்’ என, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது