சட்டப்பேரவை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் ஆந்திராவில் வாக்குப் பதிவு விறுவிறுவெனத் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன், பவன் கல்யாண் ஆகியோரது கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தேசியக் கட்சிகளான பாஜக., காங்கிரஸ் போட்டியில் இல்லாதது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மக்களவைத் தேர்தலோடு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,93,45,717 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது! காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு களம் காண்கிறார். அவரது மகனான நாரா லோகேஷ் மங்களகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று காலை சந்திரபாபு நாயுடு அவர் மனைவி புவனேஸ்வரி, அவரது மகன் நரா லோகேஷ் அவர் மனைவி பிராஹ்மணீ என குடும்பத்துடன் சென்று உண்டவல்லியில் வாக்களித்தனர்.
எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெண்டுலாவில் போட்டியிடுகிறார். அவர் தனது வாக்கினைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.
இது போல், ஜனசேனா கட்சி தலைவரான நடிகர் பவன் கல்யாண், பீமாவரம், கஜூவாக்கா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.