தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய குண்டுவெடிப்பு… பாதுகாப்பு காரணமாக இலங்கைக்கு இடம்பெயர்ந்தது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
இலங்கையில் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கப்போவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்று, இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்று கூறப் படுகிறது. இதனால்தான் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஏதாவது ஒரு நாட்டில் கிறிஸ்தவ சர்ச்சுகளைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்த புதிதாக தோன்றியுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாக 6 மாதங்களுக்கு முன்பே உளவுத் தகவல் கசிந்துள்ளது.
இந்தத் தக்குதல்கள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர சர்ச்சுகளில் நடத்தப்படலாம் என்று ரகசிய தகவலில் கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்ததால், தங்கள் தாக்குதல் திட்டத்தை பாதுகாப்பு குறைவாக உள்ள இலங்கைக்கு பயங்கரவாத அமைப்பு மாற்றி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பு மேலும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. சென்னை சாந்தோம் சர்ச், வேளாங்கண்ணி மாதா சர்ச், தூத்துக்குடி மாவட்ட சர்ச்சுகள், மணப்பாடு கடலோர பகுதிகளில் உள்ள சர்ச்சுகள் என பலவும் தற்போது தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப் பட்டுள்ளன.
மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது! நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், எழும்பூர் கென்னட் லைனில் உள்ள புத்தமடாலயம் ஆகியவற்றுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதனிடையே இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில், இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியவர்கள் எனக் கூறி, மூன்று பேரின் படத்தை வெளியிட்டதாகவும், அபுல் பாரா, அபுல் முக்தார் மற்றும் அபுல் உபைதா ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் என்று கூறப் பட்டதாகவும் தகவல் வெளியானது.
இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் பொறுப்பாளர் ஸஹரான் ஹாஸின் என்பவரே அபுல் உபைதா என்று அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் இலங்கை கடல் பிரதேசத்தின் வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், இலங்கையை ஒட்டியுள்ள இந்தியக் கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
[su_posts template=”templates/teaser-loop.php” id=”68521, 80828, 80705, 80813, 30593″ posts_per_page=”5″ order=”desc”]