தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மீண்டும் மோதி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கிறார்.
சனிக்கிழமை இன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசுவதற்காக மையப் பகுதிக்கு வந்த நரேந்திர மோதி, அதற்கு முன்னதாக, இந்திய அரசியல் சாசனத்தை வணங்கினார்.
அதன் பின்னர் மோதி பேசிய போது, புதிய இந்தியாவை உருவாக்க இனிதான தொடக்கம் இது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் வழங்கிய தீர்ப்பு இது. நீங்கள் தலைவராக என்னை தேர்ந்தெடுத் துள்ளீர்கள்.
நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கூட்டணிக் கட்சி எம்.பி.,களுக்கும் எனது வாழ்த்துக்கள். முதல்முறையாக தேர்வான எம்.பி.,க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்த வெற்றி விழாவை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுவாழ் இந்தியர்களும் கொண்டாடு கிறார்கள். அனைவரது ஆலோசனையையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
புதிய இந்தியாவை உருவாக்க இந்த தீர்ப்பை மக்கள் நமக்கு அளித் துள்ளனர். என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. யார் சேவை செய்வார்கள் என அறிந்து மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
நிறைய பொறுப்புகள் நம் முன் உள்ளன. அவற்றை ஏற்பதற்காக இங்கு வந்துள்ளோம்.
எங்களது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேர்தலில் வெற்றியை தந்துள்ளனர். சேவையை தொடரும் போது மக்களின் ஆதரவு தானாகவே கிடைக்கும்.
2019 தேர்தல் பல தடைகளை உடைத்தெறிந்த தேர்தல். இந்த தேர்தல் உலகத்தையே ஆச்சர்யபட வைத்துள்ளது. இது மனங்களை ஒருங்கிணைத்த தேர்தல்.
அதிகளவில் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். பெண்களும் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
2014 லோக்சபா தேர்தலை காட்டிலும் 2019 தேர்தலில் 25 சதவீதம் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளோம்.
சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.,க்கள் இந்த மக்களவையில் தான் உள்ளனர். பல தேர்தல்களில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளேன். இந்த தேர்தல்தான் எனக்கு ஒரு பாடம் கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் நான் பிரசாரம் செய்வதற்காக செல்லவில்லை மாறாக நான் ஒரு தீர்த்த யாத்திரையை மேற்கொண்டேன்.
பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்ததில்லை. என் மீதான விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை… என்று பேசினார் நரேந்திர மோதி.
இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பாஜக செய்துள்ள சேவைப் பணிகள் மக்கள் நல திட்டங்கள் இவை நம் வெற்றிக்கு வழி வகுத்துள்ளன என்றார் … மேலும் அவர் மோதி குறித்து பேசியபோது. ..
50 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கழிப்பறை வசதி, மின் வசதி செய்து கொடுத்துள்ளோம். நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தவர் மோதி.
யார் சிறப்பாக செயல்படுகிறார் களோ அவர்களுக்கே மக்கள் ஆதரவு இருக்கும். யாரைத் தேர்வு செய்தால் நாட்டுக்கு நல்லது என அறிந்து மக்கள் மோதியை தேர்வு செய்துள்ளனர் என்றார்.
முன்னதாக புதிதாக வெற்றிபெற்ற தே.ஜ. கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று சனிக்கிழமை இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் நரேந்திரமோதி, பாஜக., தலைவர் அமித் ஷா, பாஜக., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, அகாலிதள தலைவர் பிரகாஷ்சிங் பாதல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், புதிய அரசின் திட்டங்கள் மற்றும் அமைச்சரவை குறித்து பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.