முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப் படுகிறது. ராஜீவ் இன்னுயிர் துறந்து 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.
1944 ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பொதுக் கூட்டத்தில் வைத்து 1991 மே 21ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப் பட்டார்.
இவரது தாயார் பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 இல் பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், இந்தியப் பிரதமராக பதவி ஏற்றார். விமானியாக வேண்டும் என்ற ஆவலில், விமானம் ஓட்டும் பணியில் ஈடுபட்டவரை, இவரது தாயார் இந்திரா காந்தி அரசியலுக்கு இழுத்து வந்தார்.
முன்னர் இவரது சகோதரர் சஞ்சய் காந்தியையே தனது அரசியல் வாரிசாக இந்திரா காந்தி முன்னிறுத்தியிருந்தார். ஆனால் அவர் விமான விபத்து ஒன்றில் காலமானதால், பின்னர் ராஜீவை அரசியலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா காந்தி. 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அமேதியை அவர் குடும்பமே தொடர்ந்து தன் வசம் வைத்துக் கொண்டிருந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு தனது இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அஞ்சலி செய்தி:
Tributes to former PM Shri Rajiv Gandhi on his death anniversary.
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 21, 2019