பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் இருந்து சௌக்கிதார் என்ற காவல்காரன் என்ற பொருள்படும் பெயரை நீக்கியுள்ளார்! எனவே அனைவரும் சௌக்கிதார் என்ற பட்டப் பெயரை தங்கள் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தன்னை சௌக்கிதார் அதாவது, காவல்காரன் என்று பிரசார கூட்டங்களில் கூறிக் கொண்டார். இதை அடுத்து காவல்காரன் ஒரு திருடன் என்று பொருள்படும் வகையில் ராகுல்காந்தி மோடியை விமர்சித்தார். குறிப்பாக, ரபேல் விமான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் விமர்சித்தது பெரிய அளவில் பேசப்பட்டது !
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பெயருக்கு முன் சௌக்கிதார் நரேந்திர மோடி என்று டிவிட்டர் பதிவுகளில் மாற்றிக் கொண்டார்! மேலும் தனது சௌக்கிதார் என்ற பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் சௌக்கிதார் என்று போட்டுக் கொள்ளுமாறு ஒரு பிரச்சாரத்தையும் துவக்கி வைத்தார்! அது பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்தது!
முந்தைய தேர்தலில் சாய்வாலா என்று டீக்கடைக்காரர் மோடி என்று அழைத்த ராகுல் காந்தியால் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது! இந்த முறை சௌக்கிதார் காவல்காரன் என்று ராகுல் காந்தி அழைத்ததால் இப்போதும் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது
இந்நிலையில் தனது சௌக்கிதார் என்ற பெயரை தன் ட்விட்டர் பதிவில் இருந்து நீக்கப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் தங்களை சௌக்கிதாராக, காவல்காரர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்றும், இந்த நாட்டுக்காக மிகப் பெரிய சேவையைப் அவர்கள் செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ள மோடி, காவல்காரன் என்ற அந்தச் சொல் மிகவும் சக்தி வாய்ந்த அடையாளமாக இந்தியாவைப் பாதுகாக்கும் அடையாளமாக ஊழல் மதவாதம் சாதிவாதம் ஆகிய பேய்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் ஓர் அடையாளமாக மாறிப் போனது என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
எனவே, தாங்களும் ஒரு காவல்காரரே என்ற அந்த மக்களின் உணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாகக் கூறியுள்ள மோடி, காவல்காரன் என்ற இந்த உள்ளுணர்வை ஒற்றுமையை இந்தியாவின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் இருந்து காவல்காரன் சென்று விடும் என்றும், அது இனி தனது உள்ளார்ந்த அங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்! இதை அனைவரும் பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
இந்நிலையில் அவருடைய டிவிட்டர் பதிவிலிருந்து சௌக்கிதார் – காவல்காரன் என்ற அடைமொழி பெயர் நீக்கப்பட்டு வழக்கம்போல் நரேந்திர மோடி என்ற பெயர் டிவிட்டரில் பளிச்சிடுகிறது!