மொழிக்கல்வி இன்றைய நவீன உலகில் ஒரு முக்கியமான அறிவுத்தகுதி அல்ல. பலமொழிகள் அறிந்திருப்பதனால் பெரிய நன்மை ஏதும் இல்லை. ஒருவேளை இன்னும் பத்தாண்டுகளில் மொழிகளுக்கிடையேயான தானியங்கி மொழியாக்கம் முழுமையை அடைந்துவிடக்கூடும்..
நான் இப்போதே சாதாரணமாக பிரெஞ்சு, ஸ்பானிஷ் இணையதளங்களை வாசிக்கிறேன். கன்னட வங்க இணையதளங்களைக்கூட வாசிக்கிறேன். இச்சூழலில் மொழிக்கல்விக்கு மூளையுழைப்பின் பெரும்பகுதியைச் செலவிடுவது மாபெரும் வீணடிப்பு
அத்துடன் இன்று அறிவியலுக்குள்ளேயே பல மொழிகளை நாம் கற்றேயாகவேண்டியிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அல்ஜிப்ரா ஒரு தனிமொழி. வேதியியல்குறியீடுகள் ஒரு தனிமொழி. அப்படி மொழிக்குள் பலமொழிகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகவே மேலதிகமாக ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்காக’ மொழி கற்பது போல அபத்தம் வேறில்லை. அது ஒட்டு மொத்தமாகவே இந்தியாவை அறிவார்ந்த பின்னடைவுக்கே கொண்டு செல்லும். உலகப் போட்டியில் நாம் தோற்போம்
இப்போதே நாம் பிள்ளைகள்மேல் மிகு சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இள வயதில் இரண்டு எழுத்துருக்களை [லிபிகளை] படிக்கவும் எழுதவும் கற்பது மிகப்பெரிய சுமை. இளமையில் நாம் மொழியை எளிதாகக் கற்கிறோம். ஆனால் லிபி கற்பது மிகப்பெரிய உழைப்பு. யோசித்துப்பாருங்கள். நாம் கையில் எழுதுகோலை எடுப்பது முதல்வகுப்பில் [இப்போதெல்லாம் இரண்டு வயதில்] ஓரளவு சரளமாக நாம் எழுத ஆரம்பிப்பது பத்தாம் வகுப்பில்.
பத்துப் பதினைந்தாண்டுக்கால கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் ஐந்தாறு மணிநேரம் பயின்றுதான் கைக்கு எழுத்துக்கள் பழகவேண்டியிருக்கிறது. மூளை எழுத்துருக்களை சரளமாக மொழியாக ஆக்கமுடிகிறது. மானுடம் அளிக்கும் மிகப்பெரிய அறிவுழைப்பு எழுதப்பழகுவதும் எழுத்துருவை மொழியாகப் பழகுவதும்தான்.
இரண்டுமொழியோ மூன்றுமொழியோ கடும் உழைப்பால் கற்கமுடியும்தான். ஆனால் இயல்பாகவே மூளை அவற்றில் ஒன்றைத்தான் தனக்குரியதாகத் தெரிவுசெய்யும். அதில்தான் திறன் வெளிப்படும். நான் கற்ற காலத்தில் எங்கள் மூளை தமிழைத் தெரிவு செய்தது. 15 ஆண்டுக்காலம் ஆங்கிலம் கற்ற பின்னரும் ஆங்கிலம் கைக்கும் மூளைக்கும் அயலானதாகவே இருந்தது. இன்றைய மாணவனுக்கு ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. தமிழ் அயலானதாக உள்ளது.
தமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் எழுத்துவடிவங்கள் முழுக்கமுழுக்க வேறானவை. அதாவது அவற்றின் வளைவுத்தன்மைகள், கோட்டுவடிவங்கள் முற்றாக வேறுபட்டவை. அவற்றை மூளை எதிர்கொள்கையில் திகைக்கிறது.
ஒருவன் இணையான கோட்டுவடிவம்கொண்ட தமிழ் எழுத்துருவையும் மலையாள எழுத்துருவையும் கற்பதுபோல அல்ல அது. முற்றிலும் வேறான கோட்டுவடிவம் ஒன்றை எதிர்கொள்வதை மூளை எத்தனை எதிர்ப்புடன் சந்திக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆய்வுகள் இன்று வந்துள்ளன
எழுதுவது என்பது விரல்களை ஒரு ஆக்ரோபேட்டிக்ஸுக்குப் பழக்குவது என்று பூஃக்கோ சொல்கிறார். இரண்டு லிபிகளை எழுதுவது என்பது இரண்டுவகை ஆக்ரோபாட்டிக்ஸ்கலைகளை ஒரே சமயம் பழகுவது. அதுவே நம் மூளையைச் சோர்வடையச் செய்து இந்நூற்றாண்டுக்குரிய மெய்யான கல்வியை அடைய முடியாமல் ஆக்கிவிடுகிறது என்பதே என் தரப்பு. இதில் மூன்றாவது ஆக்ரோபாட்டிக்ஸை புகுத்த நினைக்கிறார்கள்.
இந்தியோ வேறு மொழியோ தேவை என்றால் கற்றுக்கொள்ள இன்று எளிய வழிகள் உள்ளன. தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்ளவும் வழிகள் உள்ளன.
ஜப்பான் சென்று மிகச் சிக்கலான ஜப்பானிய மொழியைக் கற்ற நண்பர்கள் பலரை சமீபத்தில் சந்தித்தேன். கற்காமல் மொழியாக்கம் செய்யவும் வாய்ப்புகள் மிகுதியாகி வருகின்றன.
இன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய பருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத் தற்கொலை.
- எழுத்தாளர் ஜெயமோஹன்