7 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை ஹூஸ்டன் நகருக்குச் சென்ற பிரதமருக்கு அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து, பல்வேறு அமைப்பினரின் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது.
பின்னர் பிரதமர் மோடி இன்று எரிசக்தி துறை நிறுவன சிஇஓ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக, இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டார்.
பின்னர் பிரதமர் மோடியை பல்வேறு அமைப்பினர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்து, பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஹூஸ்டன் நகர் வாழ் சீக்கிய அமைப்பினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்தினர். மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர்கள், அதற்காக மோடியைப் பாராட்டுவதாகவும் கூறினர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில், 1984ல் நடந்த சீக்கியர் படுகொலை குறித்த விவகாரம், தில்லி விமான நிலையத்துக்கு குருநானக் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுதல், இந்திய அரசியல் சாசனத்தில் 25வது பிரிவு, விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் சில உள்ளன.
சந்திப்புக்குப் பின்னர் சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறிய போது, பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், சீக்கியர்களுக்காக மத்திய அரசு செய்த பணிகளுக்காக நன்றி தெரிவித்து கொண்டோம். கர்தார்பூர் வழித் தடத்திற்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தோம். ஹவுடி மோடி கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது பிரதமர் மோடி எவ்வளவு முக்கியமான தலைவர் என்பதை காட்டுகிறது என்றனர்.
மேலும், சீக்கியர்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறப் பட்டதாகவும், மோடி நமது புலி, அவரை நாம் இரும்பு மனிதர் என்று கூறுவோம், அவருக்கு நாம் ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டார், பிரதமர் மோடியைச் சந்தித்த சீக்கியர் குழுவில் இடம்பெற்ற நபர்.
பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
காஷ்மீர் மீதான மத்திய அரசின் நடவடிக்கைக்கு 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.
பின்னர், தாவூதி போரா அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு ம.பி.,யின் இந்தூரில், அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.