திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்!
வருடாவருடம், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். பக்தர்கள் சாதாரண கிரிவலம் நாட்களிலேயே அதிகம் வரும் நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் பெருமளவில் கலந்து கொள்கின்றனர். அதற்கு ஏற்ப திருவண்ணாமலையை தூய்மைப் படுத்தும் பணிகளிலும், சுகாதார ஏற்பாடுகளிலும் மாவட்ட நிர்வாகம் பெருமளவில் இறங்குகிறது.
இந்நிலையில், பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்தும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இதேபோன்ற அறிவிப்பை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் டிச.9ஆம் தேதி மாலை 6 மணி முதல், 10ஆம் தேதி மாலை 6 மணி வரை இதற்கான கூப்பன்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக குபேரலிங்கம், அண்ணா நுழைவு வாயில், ஈவேரா சிலை ஆகியவற்றுக்கு அருகில் குடில்கள் அமைக்கப்பட உள்ளன.
கணினி முறையில் குலுக்கல் நடத்தப்பட்டு, 12 பேர்களுக்கு தலா 2 கிராம் தங்கம், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும்.
துணிப்பை கொண்டு வந்து கூப்பன் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசாக மேலும் ஒரு துணிப்பை வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
[poll id=”28″]