மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பதவி ஏற்றதும் ஒரு சுயேட்சை கவுன்சிலர் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இதற்குக் காரணம், தன்னை கடத்தி விடுவார்கள் என்ற பயம் தானாம்!
இன்று, கோவில்பட்டியில் ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், அவர்களை திமுக.,வினர் வேனில் கடத்திச் சென்றதாக அதிமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக – 8, இ.கம்யூ., – 1, அதிமுக – 5, தேமுதிக – 1, சுயேட்சை – 4 இடங்களில் வெற்றி பெற்றனர். ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்பதால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை கணக்கு செய்தன.
இரு தரப்பினரும் சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் இன்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில், சுயேட்சை வேட்பாளர்கள் பதவியேற்றதும் அவர்களை திமுக.,வினர் வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டையபுரம் சாலையில் அதிமுக, தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது போன்ற நிலை தனக்கு வந்துவிடக் கூடாது என்றுதான், முன் ஜாக்கிரதையாக ஒரு கவுன்சிலர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சுவர் ஏறிக் குதித்து ஓட்டம் பிடித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 8 வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் அரவிந்த், வெற்றி பெற்று, இன்று பதவியேற்றார். பதவி ஏற்ற கையுடன், அரவிந்த், தன்னை கடத்தி விடுவார்களோ என பயந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதைக் கண்டு பலர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.