பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி ஆய்க்குடியைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் நிறுவனர், சமூகசேவகர் S.ராமகிருஷ்ணன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இருவரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை நிறுவிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து, தென்காசி வட்டார மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த போது…
இவருக்கு பத்மஸ்ரீ விருதை மோடி அரசு அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது. இவருக்கெல்லாம் பாரத் ரத்னா விருதே கொடுக்கலாம். மாமனிதர் இவர்.
கை, கால், ஏன் தலை கூட ஆட்ட இயலாது. கண்களின் மீது ஒரு ஈ வந்து அமர்ந்தாலும் உதவியாளர்தான் வந்து விரட்ட வேண்டும். இத்தகைய உடல் பிரச்சனை உள்ள ஒரு மனிதன் வியத்தகு சாதனையை புரிந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா ?
ஆதரவற்ற மக்களுக்கு மருத்துவ சேவை, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பலவிதமான மருத்துவ சேவைகள். Early Intervention என்று சொல்லப்படுகிற குழந்தைகளுக்கு வரும் பல பிரச்சனைகளை முன் கூட்டியே அறிவது, ஆதரவற்றவர்களுக்கு குடிசை தொழில் பயிற்சி என இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ !!
மாமனிதர்களுக்கே இருப்பது போல் தற்பெருமையோ, தான் என்கிற எண்ணமோ துளியும் இல்லாத மனிதர்.
கோவை ஜி.சி.டி. பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கையில் ராணுவ ஆள்சேர்ப்பு நடந்துள்ளது. அதில் தேர்ச்சி பெற கயிற்றில் ஏறிய போது கீழே விழுந்து முதுகு துண்டு உடைந்து உடல் முழுதும் செயல் இழந்து போனது. உட்கார்ந்த நிலையில் (கிட்டத்தட்ட விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் போல்) மட்டுமே செயல்பட இயலும்.
நம்மை போன்ற சாமான்யர்கள் நொறுங்கிப் போய் தற்கொலை செய்து கொள்ள கூட தயங்கி இருக்க மாட்டோம். ஆனால் ராமகிருஷ்ணன் ஜி இன்று பல லட்சம் பேருக்கு விடிவெள்ளி.
அமர் சேவா என்ற அமைப்பை தொடங்கி பலரின் வாழ்வில் விளக்கேற்றி உள்ளார். ஆனால் இவரையும் மிஞ்சிய சேவையாளர் இவரின் துணைவியார். இவரின் இந்த உடல்நிலை சவாலையும் கண்டு கொள்ளாமல் இவரைத் திருமணம் செய்துக் கொண்டு, மிகப்பெரும் சேவைகளை அவரும் செய்து வருகிறார்.
நாம் வாழும் இந்த சுயநலமான உலகில் இத்தகைய மாமனிதர்களும் வாழ்கின்றனர் என்பதே நமக்குப் பெருமை. இவர்களைப் போற்றி பணிவுடன் வணங்குகிறோம் என்றனர்.