டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பித்து வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்றுத் தருகிறார்.
உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக்கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தது. அப்போது மோடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
உடனே ரஜினிக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்று கூறப் படுகிறது. ரஜினி இந்தப் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் பகிரப் பட்டு வருகின்றன.
முன்னதாக, நேற்று முன் தினம், ரஜினி விமானம் மூலம் மைசூர் சென்றார். பந்திபூர் காட்டு பகுதியில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. பந்திபூர் காட்டுப்பகுதி கர்நாடக – கேரள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- ரஜினி படப்பிடிப்பை நடத்திக்கொள்ள 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் படப்பிடிப்புக்கு அனுமதி கோரும்போது ரஜினி நடிக்கும் படம் என்று குறிப்பிடவில்லை. பதிலாக ரஜினி சிறப்பு விருந்தினராக படப்பிடிப்புக்கு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி பந்திபூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளார். மேலும் சில நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு படப்பிடிப்பு காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் பார்த்த பிறகே அதற்கான அனுமதி வழங்குவார்கள் … என்றனர்.