முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள்.
2013-14 ம் ஆண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 24, 242. தற்போது 36,192. தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் 2012 ம் ஆண்டிலிருந்து 2014 ம் ஆண்டு வரை முறையே 41,39,43 இடங்கள் தான் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2015 முதல் இன்று வரை மூன்றில் ஒரு பங்கு இடங்களை 5 வருடங்களில் 11,950 இடங்களை அதிகரித்துள்ளது பாஜக அரசு. அதில் 27 சதவீத இடங்களை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 2015 முதல் 2018 வரை முறையே 42,76,78,84 என்று அதிகரித்தே வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும், மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2006 ன் படி மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் எஸ் சி, எஸ் டி பிரிவினருக்கு முறையே 15 மற்றும் 7.5 விழுக்காடு ஒதுக்கீடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத ஒதுக்கீடும் முறையே பின்பற்றப்படுகிறது. மேலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிற காரணத்தினால் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதை உணரவேண்டும். மேலும் , இது குறித்த வழக்கு (Saloni Kumari versus Directorate of Health Services – petition number 596/2015) உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலை இப்படியிருக்க ஸ்டாலின் அவர்களுக்கு என் கேள்விகள்.
தற்போது இது குறித்து கேள்வி எழுப்பும் நீங்கள் 15 வருடங்கள் மத்திய அரசின் ஆட்சியில் இருந்த போது, இது குறித்து வாய் மூடி மெளனமாக இருந்தது ஏன்?
தற்போது அதிக முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை வரவேற்க மனமில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவது உள்நோக்கம் கொண்ட செயல் தானே ?
ஆட்சியில் இருக்கும் போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து கவலைப்படாத தி மு க, இப்போது இதை அமல்படுத்த வேண்டும் என கேட்பது, ஆட்சியில் இருந்த போது அதை செய்ய மனம் வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது அல்லவா?
ஏன் இந்த இரட்டை வேடம்? கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் மாணவர்களின் நலன் குறித்து சிந்திப்பீர்களா?
பதிலளிப்பாரா ஸ்டாலின் அவர்கள்?
- நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)