“பார்வை கிடைக்க பதிகம் பாடச்சொன்ன பரமாசார்யா”
(யாருக்கு,எதை,எப்படிச் சொல்லணுமோ அப்படிச்
சொல்லி புரியவைச்சு,அவாளோட கஷ்டத்தைத்
தீர்த்து வைப்பார்!-(என்னோட பெருமை என்ன இருக்கு
எல்லாம் அந்த காமாக்ஷியோட கடாட்சம் என்றும்
சொல்லுவார்)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒரு சமயம் மகாபெரியவா காஞ்சி மடத்துல இருந்த
சமயத்துல, தன்னோட பேரனுக்கு வைசூரி போட்டு
கண்பார்வை போயிடுத்துன்னு ரொம்பவே கவலையோட
வந்து பெரியவாகிட்டே முறையீடு பண்ணினா வயசான
ஒரு அம்மா.
ஆனா,அவா சொன்னதையே கவனிக்காத மாதிரி,பக்கத்துல
இருந்த உபன்யாசகர் ஒருத்தர்கிட்டே பேச ஆரம்பிச்சார்,
மகா பெரியவா. பேச்சுக்கு நடுவுல, ‘பெற்றம்’னு ஒரு
வார்த்தை உண்டே. அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமோ?”
-ன்னு பெரியவா கேட்டார்.
உபன்யாசகர், அதுக்கு ‘கால் நடைகள்”னு விளக்கம்
சொல்லிட்டு,திருப்பாவையில் கூட ‘பெற்றம்
மேய்த்துண்ணும் குலம்’னு வந்திருக்கு” அப்படின்னார்.
“சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்த வார்த்தையைப்
பயன்படுத்தியிருக்கார் தெரியுமோ?” அப்படின்னு கேட்ட
பரமாசார்யா, கொஞ்சம் நிறுத்திட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
“எப்படிப்பட்ட காலகட்டத்துல,எதுக்காக அந்த வார்த்தையைப்
பயன்படுத்தினார் தெரியுமோ?. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
பரவை நாச்சியாரைக் கல்யாணம் செஞ்சுண்டார்……..
அதுக்கப்புறம் திருவொற்றியூருக்கு வந்தவர் அங்கே சங்கிலி
நாச்சியாரை நேசிச்சார். அவ, தன்னைக் கல்யாணம்
பண்ணிக்கணும்னா, தன்னைப் பிரிய மாட்டேன்னு
திருவொற்றியூர் ஈஸ்வரன் சன்னதியில் நின்னு, சுவாமியை
சாட்சியா வைச்சு சத்தியம் பண்ணணும்னு நிபந்தனை விதிச்சா.
சுந்தரருக்குத்தான் சிவபெருமான் சிநேகிதராச்சே.அதனால,
தயங்காம சத்தியம் செய்யறதுக்கு ஒப்புத்துண்டார்…..
அதுக்கப்புறம் நேரே ஆதிபுரீஸ்வரர்கிட்டே போனார். நடந்ததை
சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செஞ்சு தர வர்றச்சே, நீ
இந்த சன்னதியில் இருக்க வேண்டாம்.வெளீல இருக்கிற
மகிழம்பூ மரத்தடியில போய் அமர்ந்துடு. ஏன்னா, உன்மேல்
சத்தியம் பண்ணிட்டா அதை மீறவே முடியாது. எனக்கு அது
சாத்யமான்னு தெரியலை!” சுந்தரர் சொன்னதும் சுவாமி
மறுக்காம சரினுட்டார்.
அதோட நிற்காம சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவுலபோய்,
“சுந்தரரை என் சன்னதியில் சத்தியம் பண்ணச் சொல்லாம
மகிழ மரத்தடியிலே பண்ணச் சொல்லு!” அப்படின்னார்.
மறுநாள், சங்கிலி நாச்சியார் சுந்தரர்கிட்டே அப்படியே
சொன்னாசுந்தரருக்கு இது ஈஸ்வரனோட திருவிளையாடல்னு
புரிஞ்சுடுத்து. வேற வழியில்லாம மகிழ மரத்தடியில
சத்தியம் பண்ணினார்.
கொஞ்சநாள் ஆச்சு. திருவாருர் தியாகராஜரை மறுபடியும்
பார்க்கணும்னு ஆசை வந்துடுத்து. சங்கிலி நாச்சியார்கிட்டே
சொல்லிக்காமலே கிளம்பிட்டார்.ஆனா,சத்தியம்
செஞ்சிருக்காரே..ஈஸ்வரன் சும்மா இருப்பாரா?
திருவொற்றியூர் எல்லையைத் தாண்டினதுமே அவரோட
ரெண்டு கண்ணும் இருண்டுடுத்து.
சத்தியம் தவறினவர் ஸ்நேகிதனாலும் சுவாமி தண்டிக்காம
விடமாட்டார். “என்ன செஞ்சாலும் நீயே கதி!”ன்னு ஈஸ்வரனைக்
கும்பிட்ட சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்,இந்தக் காஞ்சி க்ஷேத்ரத்துக்கு
வந்து ஏகாம்பரேஸ்வரரைக் கும்பிட்டு ஒரு பதிகம் பாடினார்.
அவ்வளவுதான் அவரோட இடது கண்ல பார்வை திரும்பிடுத்து.
ஈஸ்வரனோட இடது பாகத்துல இருக்கறவ யார்? காமாட்சி
ஆச்சே..! அவளோட க்ருபைதான்.
அந்தப் பதிகத்தைப் பாடினா போதும். போன பார்வை திரும்பி
வந்துடும்!” சொல்லி முடிச்சு பெரியவா மெதுவா அந்த வயசான
அம்மா இருந்த பக்கம் திரும்பினார்.
இதுவரைக்கும் தன்னை கவனிக்காதவர் மாதிரி நடிச்சுண்டு,
தனக்காகவே அந்தப் புராணக்கதையைச் சொல்லியிருக்கார்
பரமாசார்யாங்கறது அந்தப் பாட்டியம்மாவுக்கு அப்போதான்
புரிஞ்சுது.நமஸ்காரம் செஞ்ச அவாகிட்டே எதுவுமே சொல்லாம
புன்னகையோட கொஞ்சம் கல்கண்டும்,குங்குமமும் பிரசாதமா
அவா கையில குடுத்து, ஆசிர்வாதம் செஞ்சார் பெரியவா.
“ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே
..அப்படின்னு தொடங்கி
பெற்றம் ஏறுகந் தேற வல்லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படுவானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே….”
அப்படின்னு முடியற அந்த தேவாரப் பதிகத்தை தினமும்
பாராயணம் பண்ணினா அந்தப் பாட்டியம்மா.
பரமசார்யாளொட பரம தயாள க்ருபையால தன்னோட
பேரனுக்குப் பார்வை திரும்பக் கிடைச்சுடுத்துன்னு
அடுத்தமாசமே அவனையும் அழைச்சுண்டு வந்து
சந்தோஷமா சொன்னா.பாட்டியம்மா.
“என்னோட பெருமை என்ன இருக்கு? எல்லாம் அந்த
காமாக்ஷியோட கடாட்சம்!” அப்படின்னு சொல்லி
பிரசாதம் குடுத்து ஆசிவதிச்சார் , மகா பெரியவா.
(பெற்றம்- எருது,காளை, கால்நடை)