என் மனம்நிறை நாட்டுமக்களே, இது பருவமழைக்காலமும் கூட. கடந்த முறை நான் உங்களிடம் என்ன கூறினேன்! பருவமழைக்காலத்தில் மாசு காரணமாகவும், அவற்றிலிருந்து பெருகக்கூடிய நோய்களால் அபாயம் இருக்கிறது, மருத்துவமனைகளில் கூட்டம் பெருகலாம் என்பதால், நீங்கள் தூய்மையின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத கஷாயம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வாருங்கள். கொரோனா பெருந்தொற்று நிலவும் இந்த வேளையில், நாம், பிற நோய்களிலிருந்து விலகி இருப்போம். நாம் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் நம்மை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
நண்பர்களே, மழைக்காலத்தில் நாட்டின் ஒரு பெரிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. பிஹார், அஸாம் போன்ற மாநிலங்களில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கணிசமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது, ஒரு புறம் கொரோனா என்றால் மறுபுறமோ இன்னொரு சவால் என்ற நிலையில் அனைத்து அரசுகளும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழுக்கள், மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பேரிடரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
அனைத்து வகைகளிலும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஆதரவாக நாடு ஒன்று திரண்டிருக்கிறது.
நண்பர்களே, அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திக்கும் வேளையில், அதற்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 15 வந்து விடும். இந்த முறை ஆகஸ்ட் 15ம், வித்தியாசமான சூழ்நிலைகளில் இருக்கும் – கொரோனா என்ற பெருந்தொற்றுக்கு இடையே.
என்னுடைய இளைய நண்பர்களிடமும், நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நாம் இந்த சுதந்திரத் திருநாளன்று பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மனவுறுதியை மேற்கொள்வோம், தற்சார்பு பாரதம் உருவாக்குவோம், புதியன ஏதாவது ஒன்றைக் கற்போம், கற்பிப்போம், நமது கடமைகளை ஆற்றுவோம் என்ற உறுதிப்பாடுகளை நாம் மேற்கொள்வோம்.
பல மகத்தான மனிதர்களின் தவம்-தியாகத்தின் காரணமாகவே நாம் இன்று இந்த உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறோம். நாட்டை உருவாக்குவதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த அப்படிப்பட்ட மனிதகுல மாணிக்கங்களில் ஒருவர் தான் லோக்மான்ய திலகர்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி லோக்மான்ய திலகருடைய 100ஆவது நினைவு நாள் வருகிறது. லோகமான்ய திலகருடைய வாழ்க்கை நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய ஒன்று. அது நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம்.
அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, மீண்டும் ஏகப்பட்ட விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோம், புதியன கற்போம், அவற்றை அனைவரோடும் பகிர்வோம்.
நீங்கள் அனைவரும் உங்களை நன்றாகப் பராமரித்துக் கொள்ளுங்கள்., உங்கள் குடும்பங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். நாட்டுமக்கள் அனைவருக்கும், வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.