நண்பர்களே, புதிய ஒன்றை நாம் புரிய வேண்டும் என்று எண்ணும் போது, யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயங்கள் சாத்தியமாகின்றன. எடுத்துக்காட்டாக, பிஹாரைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாதாரணமான வேலைகளைச் செய்து வந்தார்கள்.
தாங்கள் இனி முத்துக்களை உருவாக்கப் போவதாக ஒருநாள் அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களுடைய பகுதிகளில் யாருக்கும் இதன் வழிமுறை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் முதன்மையாக அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், ஜெய்புர் மற்றும் புவநேஸ்வர் சென்று பயிற்சி மேற்கொண்டார்கள், தங்கள் கிராமத்திலேயே முத்துக்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.
இன்று இவர்கள் சுயமாக வருமானம் ஈட்டி வருவதோடு, முஸஃபர்புர், பேகுசராய், பட்னா ஆகிய இடங்களில், பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயிற்சியும் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் எத்தனை பேர்களுக்குத் தற்சார்புப் பாதை திறக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்!!
நண்பர்களே, சில நாட்கள் கழித்து ரக்ஷாபந்தன் புனிதமான நாள் வரவிருக்கிறது. பலர், பல அமைப்புகள் இந்த முறை ரக்ஷாபந்தனை வித்தியாசமான முறையில் கொண்டாடும் இயக்கத்தை செயல்படுத்தி வருவதை என்னால் காண முடிகிறது. பலர் இதை உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதோடு இணைத்தும் வருகிறார்கள்.
நமது பண்டிகைகள் காரணமாக நமது சமூகத்தில், நமது வீடுகளுக்கு அருகே இருப்போருக்கு வியாபாரம் பெருக வேண்டும், அவர்களும் பண்டிகைகளை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் எனும் போது தான் பண்டிகையின் ஆனந்தம் உண்மையில் பெருகி உணரப்படுகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் கைத்தறிப் பொருட்கள், நமது கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் பலநூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான கௌரவம் நிறைந்த நமது வரலாறு பொதிந்திருக்கிறது.
இந்தியாவின் கைத்தறிப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு கூடவே இவற்றைப் பற்றி நாம் அதிகம் பேருக்குச் சொல்லவும் வேண்டும் என்பதை நோக்கியே நமது முயற்சிகள் அமைய வேண்டும்.
இந்தியாவின் கைத்தறிப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் எத்தனை வளமானவையாகவும், வேறுபட்டதாகவும் இருக்கின்றன என்பதை எந்த அளவுக்கு உலகம் உணர்கிறதோ, அந்த அளவுக்கு உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆதாயம் ஏற்படும்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….