தஞ்சாவூர் மாவட்டத்தில் பலரது வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.5 கோடிக்கு மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் எடுத்து மோசடி நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வங்கிக்கு சென்று கேட்டபோது, வங்கி அதிகாரிகள் இதுதொடர்பாக எங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல, கடந்த வாரத்தில் மட்டும் அதிராம்பட்டினத்தில் உள்ள 2 வங்கிகளின் கிளைகளிலிருந்து சில வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.3 கோடி வரை மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்குகளை, சென்னையில் உள்ள எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது, திருச்சியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வங்கியின் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது என்றார்.
இதுகுறித்து அதிராம்பட்டினத்தி லுள்ள ஒரு வங்கி அதிகாரியிடம் கேட்டபோது, ”மோசடி தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் மனு அளித்துள்ளோம். தலைமை அலுவலகத்துக்கும் புகார் அளித்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.