சென்னை ராஜ்பவனில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின.
முன்னதாக, பணியாளர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் ஆளுநர் 7 நாள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் இருந்த 147 பேருக்கு கடந்த வாரம், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது.
அவர்கள் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். இதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டனர்.
மேலும், 38 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் ஆளுநரின் உதவியாளர் உள்பட மூவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதை அடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப் படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானதை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். தொடர்ந்து அங்கே அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியானது.