விழுப்புரம் அடுத்த வானூர் பரங்கனியை சேர்ந்த ஜீவா என்பவர் நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜீன் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக நகை, பணம் உள்ளிட்டவற்றை வீட்டிற்கு சென்று வாங்கி வருமாறு ஜீவா அடிக்கடி தகாராறு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு கணவன் – மனைவிக்குள் வரதட்சணை தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜூவா, மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு, மனைவி தன்மீது தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ராஜேஸ்வரி தனது கணவர் தன்னிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு சண்டையிட்டு பெற்றோர்களிடத்தில் நகை வாங்கி வர சொல்லி வந்ததாகவும், கடந்த மூன்றாம் தேதி நடந்த சண்டையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதுதொடர்பாக வீட்டில் சொன்னால் தனது தந்தை மற்றும் சகோதரனை கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஜீவாவை வானூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.