மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை விரட்டியடிக்க போலீசார் முண்டியடித்தனர்.
இந்துக்களின் முக்கிய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்று மகாளய அம்மாவாசை. இந்நாளில் முன்னோர்களை நினைத்து இந்துக்கள் தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருவேடகம், திருப்புவனம், அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்!
ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையில் முக்கிய அமாவாசையாக இந்துக்கள் கருதுகின்றனர். இந்நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் …
இதேபோல் இன்று திருவேடகம் மற்றும் சீரடி சாய்பாபா கோவில் எதிரே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் புரோகிதர்களை வைத்து தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்!
இதனால் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். தர்ப்பணம் கொடுக்க வந்த இடத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது மக்களுடைய மனவேதனையை மிகவும் பெரிதாகக் கிளறிவிட்டது.
சிறிது நேரத்தில் போலீசார் அப்பகுதியில் இருந்து சென்ற பிறகு, அங்கே வந்திருந்த மக்கள் வைகை ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று அவர்களாகவே தர்ப்பணம் கொடுத்து, முன்னேர்களை வேண்டிக் கொண்டனர்.
அங்கு வந்திருந்த மக்கள் அராஜக போலீசாரையும் மாநில அரசையும் சபித்தார்கள். ஊரங்கு தளர்வுகளை அகற்றிய பிறகு, டாஸ்மாக் பார்களுடன் பிராந்தி கடை போன்ற மக்கள் நல விரோதக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன! இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், விதிப்படி முன்னோர்களை நினைத்து மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வந்தால், சமூக விரோதிகளை விரட்டியடிப்பது போல் போலீசார் விரட்டி அடித்தது மிக வேதனையாக இருக்கிறது என்று கூறினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை