அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் திராவிட இயக்க கட்சிகளின் வெற்று அரசியலால் ஒரு உயரிய கல்வி அமைப்பு சீர்குலைவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.
அவர் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது….
சர்வதேசத் தரம் வாய்ந்த 500 பல்கலைகழகங்களில் ஒன்றாக நமது இந்திய நாட்டில் செயல்படுகின்ற பல்கலைக் கழகங்களையும் இணைக்கும் வண்ணம் #ஸ்டேட்டஸ் ஆஃ எமினேன்ஸ் சிறப்பு அந்தஸ்து திட்டம் ஒன்றை மத்திய அரசாங்கம் வகுத்திருக்கிறது
இதற்காக நாடு முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உயர்கல்வி,மற்றும் ஆராய்ச்சி பட்டபடிப்பு,பல்கலைகழகத்தின் வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படும். அதில் 500 கோடி ரூபாய் நிதி ஆதாரங்களுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் தமிழகத்தில் உயர் கல்வித்துறை பெரும் வளர்ச்சி அடையும்.
திமுக, அதிமுக, ஆட்சி காலங்களில் துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய்கள் விலை பேசப்பட்டன. இதன் மூலம் பெரிய ஊழலை இரண்டு கட்சிகளுமே செய்து வந்தார்கள்.
நரேந்திர மோடி அரசு பொறுப்புக்கு வந்த பிறகு தலைச்சிறந்த கல்வியாளர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார்கள். திரு.சூரப்பா ஒரு சிறந்த கல்வியாளர். அவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து சிறந்த பல்கலைக்கழகமாக வளர்ந்து வருகிறது.இந்நிலையில் சிறப்பு அந்தஸ்துக்காக அண்ணா பல்கலை கழகம் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் மாநில உரிமை பறிபோகிறது. சமூகநீதி பாதிக்கும். 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கும். என்றெல்லாம் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.
அவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய அதிமுக அரசாங்கமும் அதற்குப் பணிந்து தற்பொழுது சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.
ஏற்கனவே ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து இருக்கிறார்கள் அந்த குழு இந்த சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்ளலாமா! வேண்டாமா! என்பதை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும்.
கொரோனா காலத்தில் அந்த கூட்டம் நடக்கவே இல்லை. ஆனால் தமிழக அரசாங்கத்திற்கு மேலும் காலக்கெடுவை நீட்டித்து கொடுப்பதற்கும் மத்திய அரசாங்கம் தயாராக இருக்கிறது.
இந்நிலையில் எப்படி நவோதயா பள்ளிகளை நாம் ஏற்றுக் கொள்ளாமல் மிகப்பெரிய இழப்பிற்கு ஆளாகி உள்ளோமோ, அதேபோல இந்த சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும் நமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.
கல்வி, மருத்துவம் இவைகளெல்லாம் வியாபாரமாக இருக்கக் கூடாது. நீட் தேர்வை ஏற்றுக் கொள்வதிலும், நவோதயா பள்ளிகளை ஏற்றுக் கொள்வதிலும், மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதிலும், மத்தியஅரசாங்கம் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வழங்கக்கூடிய சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்வதிலும், இரண்டு கழகங்களும் ஒரே கருத்துகளாக இருக்கின்றன
இதன் மூலம் தமிழகமும் தமிழக மக்களும் பெரும் இழப்பை அடைந்து வருகிறார்கள் மேலும் மாநில உரிமை பாதிக்கப்படும் என்றும் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும் பொய்யான தகவலை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்
ஏற்கனவே அடல் புத்தாக்க திட்டத்தின் மூலம் கோவை காருண்யா கிறிஸ்தவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் ஏராளமான நிதியை பெற்று வருகின்றன.
நமது பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் ஆக மாற்றும் முயற்சியை மத்திய மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இது விஷயத்தில் கவனம் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொய் பிரச்சாரத்தை முறியடித்து சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
இந்து மக்கள் கட்சி இது விஷயத்தில் சென்னை பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்துவதற்காக மத்திய அரசாங்கம் வழங்கக் கூடிய சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.