சீமானின் கந்து வட்டி ஆதரவு நிலைப்பாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
தமிழ் திரையுலகமே அதிர்ந்து போயுள்ள சூழலில் அன்புச் செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ள இயக்குனர் சீமான், ‘அன்புச் செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து பணம் வாங்கு என கூறவில்லை. சாமானியர்களை நம்பி அன்பு செழியன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அரசு வங்கியே ரூ 1 லட்சம் கடனுக்கு கட்டி வைத்து அடிக்கவில்லையா? கடனை கொடுத்தவர் கேட்கிற முறையில் கடுமை கேட்கிற போது தன்மான இழப்பாக கருதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாது’ என்று பேசியுள்ளார். இது கந்துவட்டிகாரர்களின் குரலே தவிர வேறல்ல.
கந்துவட்டி கொடுமைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை அமலாக்கிட வேண்டுமென்றும் மக்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் வலுவான குரல் ஓங்கி ஒலிக்கிற போது கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக பேசுவது சரியான அணுகுமுறையல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.