சென்னையில் புதுமணப்பெண் தன் தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ (19). பி.காம் படித்துள்ளார். இவருக்கும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச்சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பாலமுருகன் தான் கடன் வாங்கி வீடு கட்டியிருப்பதால் ஜோதிஸ்ரீயிடம் உன் பெற்றோரிடம் இருந்து மேலும் பணம் வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கு மாமியார் அம்சாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து ஜோதிஸ்ரீ தன் பெற்றோரிடம் கூற இரு வீட்டாருக்கும் தொடர்ந்து பிரச்சனை எழுந்தது. இதனால் ஜோதிஸ்ரீ தன் கணவரை பிரிந்து சென்னையில் உள்ள தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஜோதிஸ்ரீ தன் சான்றிதழ்களையும், துணிகளையும் எடுக்க கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மாமியார் அம்சா வீட்டிற்குள் விடாமல் தடுத்துள்ளார். அதையும் மீறி மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றுள்ளார் ஜோதிஸ்ரீ. இதனால் ஆத்திரமடைந்த அம்சா, அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் கடும் மன வேதனை அடைந்த ஜோதிஸ்ரீ அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய ஜோதிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு அந்த அறையை சோதனை செய்தனர்.
அப்போது ஜோதிஸ்ரீ தன் தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில், “நகை, பணத்துக்கு ஆசைப்படுபவருக்கு என்னை ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா? பணம், நகை இருந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று என் கணவர் சொல்கிறார். எல்லாவற்றையும் நான் சொல்ல முடியவில்லை. நான் போகிறேன். எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவரும், மாமியாரும்தான். அவர்களை சும்மா விடாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
தன் மகளின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதிஸ்ரீயின் தாயார் உமா அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார் அம்சா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.