தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் முன்கள பணியாளராக போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதில்லை.
இந்நிலையில், கொரோனாவுக்கு நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சித்தவிளையைச் சேர்ந்த கார்லோஸ் (58), நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்லோஸ்க்கு, செல்வி என்ற மனைவியும் டெரிசா (27), ஜெரிசா (25) என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் டெரிசா டாக்டராகவும், ஜெரிசா என்ஜினீயராகவும் உள்ளனர். மனைவி செல்வி இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.