கர்நாடகத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கா்நாடகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் அதிகமாகி வருகிறது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதைத் தொடா்ந்து, கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மே 4-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலுக்கு வரும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஏப். 20-ஆம் தேதி மாநில அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருந்தது.
அதில், திங்கள்கிழமை முதல் தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை (ஏப். 26) காலை 6 மணி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
சனிக்கிழமையைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக பொதுமுடக்கம் கா்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடகத்தில் நாளை இரவு 9 மணி முதல் மே 10ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றார்.