திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி 3 BDO-க்கள் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நெக்னாமலை பகுதியில் கடந்தாண்டு ஜூலை 10ஆம் தேதி அதிகாலை பெய்த கனமழையில் குடிசை வீட்டில் வசித்து வந்த அய்யம்மாள் என்பவர் மண்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
அவருக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஊராட்சி செயலாளர் அந்த பணத்தை சுருட்டி கொண்டதாக புகார் எழுந்தது.
அவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டிருந்தால் மூதாட்டி உயிரிழந்திருக்க மாட்டார் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உயிரிழந்த அய்யம்மாள் உட்பட 23 பேருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசின் ஆவணங்களில் இருந்தது தெரியவந்தது.
இந்த ஒதுக்கீடு செய்த பணம் அனைத்தும் உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது இதையடுத்து இந்த முறைகேட்டு வழக்கில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இதன் மூலம் மொத்தம் சுமார் 35,31,517 ரூபாய் பணத்தை அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி கையாடல் செய்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் ஆலங்காயம் கிராம ஊராட்சியின் BDO க்களாக பணியாற்றிய ரமேஷ் குமார், வசந்தி உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை சார்பில் கூறுகையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஆலங்காயம் ஒன்றியத்தில் பயனாளிகள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக கணக்கு மட்டும் எழுதியுள்ளனர்.
ஒதுக்கீடு செய்த நிதியை கூட்டாக சேர்ந்து கையாடல் செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தவர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார் விரைவில் அனைவரையும் விசாரணை செய்வோம் என்று கூறினார்.