மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் 32, ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார்.
அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன்பேரில் ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றார்.
சிறிது துாரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு அர்ஷத்தை இறக்கிவிட்டார்.
பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்துவிடுவேன் என மிரட்டினார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார்.
ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரணையில் உண்மை எனத்தெரிந்தது. வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட 5 பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உண்மையில் நடந்தது என்னபோலீசார் கூறியதாவது: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் கூறியதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்துள்ளார்.
இதை பாண்டி, கார்த்திக் மற்றும் செட்டியார் என்பவர் மூலம் அறிந்த வசந்தி, விசாரிப்பது போல் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்துள்ளார். ‘டப்ளிங்’ செய்வது குற்றம் என்பதால் இவ்விவகாரத்தை வெளியே அவர் சொல்ல மாட்டார் என நினைத்துள்ளார்.
பல முறை அர்ஷத் பணம் கேட்டு நச்சரிக்க, ஒரு கட்டத்தில் ‘என் பிள்ளை சத்தியமா உன்னிடம் பறிமுதல் செய்த பையில் நோட்டு புக்தான் இருந்தது. பணமே இல்லை. தொடர்ந்து நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்’ என மிரட்டியுள்ளார்.
இதெல்லாம் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்தே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, என்றனர்.