நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கும் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
தி.மு.க. 31 வார்டுகளில் வெற்றி பெற்றது. 6 வார்டுகளில் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இரண்டு வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
வரும் 4ஆம் தேதி காலை 10 மணி அளவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
அன்று மதியம் 2 மணி அளவில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் இழுபறி இன்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
ஆன்மீகமும் அரசியலும் தழைத்தோங்கும் திருவண்ணாமலை நகரின் நகராட்சி தேர்தல் எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை நகராட்சி 1896 ஆம் ஆண்டு உருவானது. நூற்றாண்டு கடந்து உள்ள திருவண்ணாமலை நகராட்சிக்கு இப்போது வயது 126
திருவண்ணாமலை நகராட்சியில் 1947க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் 5 முறை தி.மு.க.வும், 4 முறை காங்கிரசும், 2 முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது 6 வது முறையாக தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது
இந்நகராட்சியின் தலைவராக பதவி வகித்த தி.மு.க.வை சேர்ந்த ப. உ. சண்முகம், தமிழக அமைச்சராகவும், தர்மலிங்கம், பட்டுசாமி, முருகையன் ஆகியோர் எம்.பி களாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயராஜ் எம்.எல்.ஏ. வாகவும் பதவி வகித்தனர்.
அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த பிச்சாண்டி தமிழக அமைச்சராக இருந்தார். தற்போது பேரவை துணைத்தலைவராக இருக்கிறார்.
தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், இவரது மனைவி நிர்மலா,இவர் திருவண்ணாமலை நகரத்தில் 25 ஆண்டுகாலம் தி.மு.க. நகர செயலாளராக இருந்த மறைந்த டி.என்.பாபுவின் மகள் ஆவார்., இவரை நகரமன்ற தலைவராக்க தேர்ந்தெடுப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
சேர்மன் பதவியை விட நகரமன்ற துணை தலைவருக்கு போட்டி கடுமையாகவுள்ளது.
இந்த பதவிகளை கைப்பற்ற அமைச்சர் எ.வ.வேலு மகனும் மாநில மருத்துவரணி துணைதலைவருமான டாக்டர் கம்பனும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
வெற்றி பெற்ற எல்லோரும்மே நகர மன்ற தலைவர், துணைதலைவர் பதவிக்கு ஆசைப்படலாம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலு யாரை தேர்வு செய்து அறிவிப்பார் என்பதே முக்கியம்.
திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் பதவி கிட்டத்தட்ட முடிவான நிலையில் நகரமன்றத் துணைத்தலைவர் போட்டியில் தற்போது இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10-ஆவது வார்டு கவுன்சிலர் பொறியாளர் கணேசன்,
11வது வார்டு உறுப்பினர் ராஜாங்கம் ஆகிய இருவரில் ஒருவருக்கு நகரமன்றத் துணைத் தலைவர் பதவி கிடைக்கலாம் என திமுகவினர் தெரிவித்தனர்.
- திருவண்ணாமலை பாலா