புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை – சிஆர்பிஎப் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், அவர்களின் உடல்கள் முறையாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளின் தொடர்புடையவர்கள், வேண்டுமென்றே மக்களிடம் தங்களின் பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் காட்டி பயமுறுத்துவதற்காக, இந்தத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் எனக்கூறி போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றைக் காணும் மக்கள், உணர்ச்சி வேகத்தில் பரிதாப மேலீட்டால் அதனை வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்து வரூகின்றனர். இவற்றால் இவை வைரலாகி வருகின்றன.
இது குறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎப் அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த செய்தியில்,
நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், பிரிவினை ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகள், வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தயவு செய்து யாரும் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர வேண்டாம். யாருக்கும் அனுப்ப வேண்டாம். இது குறித்து [email protected] என்ற இமெயில் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
ADVISORY: It has been noticed that on social media some miscreants are trying to circulate fake pictures of body parts of our Martyrs to invoke hatred while we stand united. Please DO NOT circulate/share/like such photographs or posts. Report such content at [email protected]
— ????????CRPF???????? (@crpfindia) February 17, 2019