இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தாக்குதல் நடந்த 3 நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தானிலும் இதே போன்று ராணுவத்தினர் செல்லும் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிப்.17 இன்று மாலை நிகழ்ந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
‘பலுசிஸ்தான் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியின்படி, தனி நாடு கேட்டு விடுதலைப் போரை நிகழ்த்தி வரும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுசிஸ்தான் ரிபப்ளிக் கார்ட்ஸ் ஆகியோர் இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர். தர்பத், பஞ்ச்கர் ஆகிய இடங்களுக்கு நடுவே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
சௌதி அரேபியா மன்ன மொகம்மத் பின் சல்மான் பாகிஸ்தானுக்கு வருகை புரிவதற்கு சிறிது நேரம் முன்னதாக, இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் தொடுத்த ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தின் கொடூரச் செயல் உலகுக்குத் தெரிய வந்த போது, இந்தியாவில் கொதிப்பு எழுந்தது. ஈரானிலும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தி 27 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் பாகிஸ்தானை குற்றம் சாட்டியிருந்தது.