விழுப்புரம் மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறைக்குள் பூட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
உளூந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுமதுரை அரசு உயர் நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
10ம் வகுப்பு மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் சிறுமதுரை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்குச் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஆசிரியர் கிருஷ்ணன் என்பவர்,இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது, அவரிடம் படித்த மாணவிக்கு அந்த ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறப் படுகிறது.
இதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் இதைத் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியரைத் தாக்கி வகுப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவரை கைது செய்து, கைகளில் விலங்கு போட்டுதான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் அடம் பிடித்தனர்.
ஆனால், அவர்களை சமாதானம் செய்த போலீஸார், ஆசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு
செய்தனர். தொடர்ந்து அந்த ஆசிரியர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,
மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.