மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும்; அதற்கு வலிமையான பிரதமர் இருக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற தேஜ., கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கோயம்புத்தூரில் அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சியினர் உள்ளடங்கிய தேஜ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை கொடீசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, இன்று மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி கோயம்புத்தூர் வந்தார். பின்னர் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேசினார்.
அதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவரது உரையில் காரசார வாசகங்கள் மிகுந்திருந்தன. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் குறித்து சாடல்கள் மிகுந்திருந்தன. ஜெயலலிதாவின் பாணியில் திமுக.,வினரை ஒரு பிடி பிடித்தார்.
எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். 130 கோடி மக்கள் வாழும் இந்திய தேசத்தில் நரேந்திர மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை உலகளவில் தலைகுனிய வைத்தது திமுக. எதிர்க் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்தார் ஸ்டாலின். ஆனால் அவர் கூறிய கருத்தை, அவர் சார்ந்துள்ள கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை.
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும், அதற்கு வலிமையான பிரதமர் வேண்டும்… என முதல்வர் பழனிசாமி பேசினார்.