தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது! வீரத்தோடு கூடிய அன்பு, இரக்கம் ஆகியவற்றால், உலக அளவில் தமக்கென தனி அடையாளத்தை படைத்திருக்கும் தமிழ் மக்கள், நேர்மை, ஒழுக்கம், அமைதி ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழனென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா!தரணியெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, ஈடில்லா வரலாற்றை கொண்டுள்ள தமிழ் பெருமக்கள் சித்திரை திருநாளை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்த இனிய புத்தாண்டு உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.