11,12-ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் ஏதாவது ஒரு மொழிப் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்று வெளியான தகவல் தவறானது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 11,12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன! அவற்றை 5 பாடங்களாகக் குறைக்கப் போவதாகவும், எனவே மொழிப் பாடங்களில் மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளதாகவும் வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்று கூறினார்.
பாடங்களுக்கான மொத்த மதிப்பெண்ணை 600 – லில் இருந்து ஐநூறாக குறைக்கும் திட்டமும் இல்லை! அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவே இல்லை! இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது!. வழக்கம் போல 6 பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும் என்று உறுதிபடத் தெரிவித்தார் செங்கோட்டையன்.
வாட்ஸப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தான் வதந்திகள் பரவும் என்பார்கள், இப்போதெல்லாம் ஊடகங்களில்தான் முதல் முதலில் வதந்திகள் பரவத் தொடங்குகின்றன!