நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக.,வில் இணைந்து விட்டதாக எழுந்த வதந்திகள் குறித்து அவரின் தாயார் மேனகா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா சுரேஷ் தமிழில் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். ஒரு கலைக்குடும்பமாகத் திகழும் கீர்த்தி சுரேஷின் தந்தை பாஜக.,வில் உறுப்பினராக உள்ளார்.
மேனகா சுரேஷ் தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். புகைப்படமும் எடுத்துக் கொள்ளப் பட்டது. இந்தப் புகைப்படம் இப்போது வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மேனகா சுரேஷ் வெள்ளிக்கிழமை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், என் கணவர் சுரேஷ் பாஜக.,வில் உறுப்பினராக உள்ளார். ஆனால் நான் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகக் கூட இருந்ததில்லை. கீர்த்தி சுரேஷும் என்னைப் போல்தான்!
நான் என் கணவர் சார்ந்திருக்கும் கட்சி என்ற முறையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தில்லி சென்றிருந்தேன். பிரசாரம் முடிந்ததும் திரைத்துறை பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் அதில் நானும் கலந்துகொண்டேன். பாஜக., அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதுதான் இவ்வாறு வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தியையும் இணைத்து செய்தியாக்கியிருக்கிறார்கள்.
எனக்கோ, என் மகளுக்கோ அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இப்போதுவரை இல்லை.. என்று கூறினார் மேனகா!
வதந்திகளுக்கு படபடத்து விளக்கம் அளிக்கும் வகையில் பாஜக., என்ன தீண்டத்தகாத கட்சியா? அவ்வாறு பாஜக.,வில் சேர்ந்துவிட்டால் ஊர் முழுதும் தெரிந்துவிடப் போகிறது; நாங்கள் பாஜக.,வில் சேரவில்லை என்று ஊடகத்தைக் கூட்டி விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பாஜக., மோசமான கட்சியா என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்!