டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது.
ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகளை அந்த வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது.
மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டது. தென் சென்னை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் போட்டியிட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலை பெற்று வரவில்லை. குறிப்பாக அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை.
சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியை விட குறைவான வாக்குகளை வாங்கி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவை தொடங்கிய தினகரனுக்கு செல்வாக்கு இருக்கும் என்று ஊடகங்களில் கூறப்பட்ட நிலையில், குறிப்பிடத்தக்க ஓட்டுகளை கூட அக்கட்சி பெற முடியாமல் போயுள்ளது. குறிப்பாக, டெபாசிட் இழக்கும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றிப் பெற்ற வெற்றி என்று அதிமுக.,வினர் கூறிவரும் நிலையில், அது உண்மையாகியுள்ளது. இவ்வளவுக்கும் அமமுக.,வை பதிவு செய்யாமல் வைத்திருந்து, கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகி, பொதுவான ஒரு சின்னமாக பரிசுப் பெட்டியைப் பெற்று, அதையே மக்களுக்கு பரிசுகள் கொடுக்கும் சின்னமாக மாற்றி.. என்னவெல்லாமோ செய்து பார்த்தார் தினகரன்.
குக்கர் விசில் அடிக்கும், பரிசுப் பெட்டி பரிசைத் தரும் என்றெல்லாம் சொல்லியும், மக்கள் ஒட்டுமொத்தமாக பரிசுப் பெட்டியை டெபாசிட் காலி என்ற விதமாக திருப்பிக் கொடுத்துள்ளனர் என்று கூறப் படுகிறது.
ஒரு மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றால் வேட்புமனுவுடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த டெபாசிட் தொகை தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் திரும்பக் கொடுத்து விடும். ஆனால் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.
அதாவது ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகளை அந்த வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது. எனவே அமமுக.,வினர் தள்ளாட்டத்தில் உள்ளனர்.