சர்வதேச எழுத்தறிவு தினம்
– கட்டுரை: கமலா முரளி –
எழுத்தறிவு … தனி மனிதனின் வெற்றியின் காரணி !
தேசத்தின் வளர்ச்சிக்கான வித்து !
இன்று உலக எழுத்தறிவு தினம் !
ஆண்டு தோறும் சர்வதேச எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
எழுத்தறிவு என்றால் என்ன ?
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது நமது தமிழ் கூறும் அறிவுரை ஆகும்.
இதனேயே ஆங்கிலத்தில் ”The Three Rs” ( Reading,wRiting and aRithmatics ) எனக் குறிப்பிடுவர்.
ஏதேனும் ஒரு மொழியிலாவது, எளிய அளவிலாவது எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது, எண்களை அறிந்திருப்பது எழுத்தறிவாகும். பொதுவாக தாய்மொழி அல்லது வட்டார மொழியில் படிக்கவும் எழுதவும் அறிந்திருப்பதை எழுத்தறிவு எனச் சொல்லலாம்.
முறை சார்ந்து, இரண்டு அல்லது மூன்று மொழிகள், கணிதம், அறிவியல், சமூகவியல் போன்று பல பாடங்களைக் கற்றுத் தேர்வது கல்வியறிவு ஆகும்.
தனிமனிதன் தன் உரிமைகளைப் பெறுவதற்கும், பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்கவும், தன் பொருளாதார நிலையைப் புரிந்து கொண்டு, தன் வரவு செலவுகளை நிர்வகிக்கவும் எழுத்தறிவு பயன்படுகிறது.
எழுத்தறிவு பெற்ற மக்கள் தங்கள் ஆற்றலையும் திறனையும் திறம் பட பயன்படுத்துவதால், எழுத்தறிவு விகிதம் உயர உயர தேசமே வளர்ச்சியுறுகிறது.
எழுத்தறிவு தினம் வரலாறு
உலகளாவிய கல்வி அமைச்சர்களின் மாநாடு 1965 ம் ஆண்டு டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் தேச வளர்ச்சி, உடல்நலம் மற்றும் தரமுயர்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் எழுத்தறிவின்மை ஒரு பெருந்தடை என வலியுறுத்தப்பட்டது. உலக அளவில், எழுத்தறிவு விகிதத்தை உயர்த்த அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் செயலாக்கத் திட்டங்கள் கொண்டுவர வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 8ம் நாளை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்க வேண்டுமென்ற தீர்மானமும் அதில் ஒரு முக்கிய தீர்மானமாகும்.
ஐ.நா. சபையின் அங்கமாகிய யுனெஸ்கோ அமைப்பு ( UNESCO ) 1965 ஆண்டு சர்வதேச எழுத்தறிவு தினத்தை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8ம் நாள் அனுசரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1966 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.
தனி மனிதருக்கும், தேசத்துக்கும் எழுத்தறிவு மிக முக்கியமானது என்பதை அனைவருக்கும் எடுத்தரைப்பதே இந்நாளின் நோக்கம் !
சிறார்களுக்கு, முறை சார்ந்து, பள்ளிகளில் கல்வி அளிப்பது, மூத்தோர்களும் முறை சாரா கல்வி முறையில் எண்ணும் எழுத்தும் கற்கவும் அனைத்து நாடுகளும் தங்கள் தேச நலத் திட்டங்களை செயல்படுத்தின.
1990 ஆம் ஆண்டு உலக எழுத்தறிவு வருடம் அனுசரிக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு ”சர்வதேச எழுத்தறிவு தசாப்தம்” ( UNLD : United Nations Literacy Decade). 2015 ஆண்டு ”அனைவருக்கும் கல்வி” எனும் கொள்கை வலியுறுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு, எழுத்தறிவு தினம் துவங்கப்பட்ட பொன்விழா ஆண்டு ஆகும். அந்த வருடத்திய கருப்பொருளாக “ கடந்த காலத்தில் பெற்றதும், எதிர்காலத் திட்டமும் “ அமைந்தது. உலக அளவில், 2030 ஆம் ஆண்டுக்குள் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்துதல், சமூக வளர்ச்சியை நிறுவுதல் போன்ற முயற்சிகளுக்கு எதிரான சவால்களைக் களைய உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்றைய சவால் :
மனிதத்தை முன்னிறுத்தும் எழுத்தறிவு : கணிணி நுட்ப கல்வி பெறுவதில் வேறுபாடுகளை நீக்குதல்” இதுவே உலக எழுத்தறிவு தினம் 2021 கருப்பொருளாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்பதற்காகப் பெரும்முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இன்றும், எழுத்தறிவின்மை என்ற நோய் பரவலாகக் காணப்படுகிறது என்பதில் எந்த வித ஐயமுமில்லை.
கோவிட் பெருந்தோற்றால் நலிந்துள்ள நல்லுலகம், தொய்வின்றி மீண்டும் உய்ய, எழுத்தறிவு இயக்கப் பணிகள் தொடரவேண்டும்.
தற்போது அனைவருக்கும் தொழில்நுட்பத்துடன் சார்ந்த சிறு சிறு கருவிகளை இயக்க ஏதுவான கல்வியும் வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த சிறு சிறு கருவிகள், செயலிகள் நிறைய மொழிகளில் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்ற சவால் இந்த மனித சமுதாயத்தின் முன் இருக்கிறது !
தொழில்நுட்ப எழுத்தறிவும் அனைவருக்கும் கிடைக்கட்டும் !