நட்டி ஃப்ரூட்டி புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
காரட், பட்டாணி, பீன்ஸ் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை – ஒரு கப் (துண்டுகளாக நறுக்கியது)
முந்திரி, பாதாம், திராட்சை – ஒவ்வொன்றும் 15
ஏலம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை – தாளிக்க
பால் – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
பனீர் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 3 தேக்கரண்டி
நெய் – கால் கப்
செய்முறை
அரிசியை நன்கு களைந்து தண்ணீரை வடித்து பத்து நிமிடங்கள் வைக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் 2 நிமிடம் வாசனை வர வதக்கவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பீன்ஸ், காரட் மற்றும் பட்டாணியைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
அதிலேயே வதக்கிய அரிசி சேர்த்து ஒரு கப் பாலும், ஒரு கப் நீரும் சேர்த்து குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேஸை சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அணைத்து விடவும்.
குக்கரைத் திறந்து சாதத்தை உதிர்க்கவும். தேவையான உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
இரண்டு தேக்கரண்டி நெய்யில் ஏலம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, கரம்மசாலா, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதக்கவும்.
பனீரை சிறு சதுர துண்டுகளாக்கி, எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். அதை எடுத்துவிட்டு அதே வாணலியில் மேலும் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், திராட்சை வறுத்து எடுத்து வைக்கவும். மேலும் நெய் சேர்த்து நறுக்கிய பழத்துண்டுகளை ஐந்து நிமிடம் வதக்கவும்.
வறுத்த பனீர், முந்திரி, பாதாம், திராட்சை, வதக்கிய வெங்காயம், பழத்துண்டுகளை புலாவில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்க்கவும்.
அடுப்பில் வைத்து நன்கு கிளறி மூடி (வெயிட் போடக் கூடாது) பத்து நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். சூடான, சுவையான நட்டி ஃப்ரூட்டி புலாவ் தயார்.
இத்துடன் உருளைக் கிழங்கு குருமா நல்ல மேட்ச். பொரித்த அப்பளம், குருமாவுடன் பரிமாறுங்கள்.
இதில் அன்னாசி, கருப்பு (அ) பச்சை திராட்சை இருந்தால் சேர்க்கலாம். வாழைப்பழம், கொய்யாப்பழம் சேர்க்கக்கூடாது.
அதிக காரம் இல்லாததால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நெய் அதிகம் சேர்க்க விரும்பாதோர், அளவைக் குறைத்துக் கொள்ளவும்.