மஷ்ரூம் பாலக் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 300 கிராம்
பாலக் கீரை – 1 கட்டு
மஷ்ரூம் – 100 கிராம்
பச்சை பட்டாணி – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 6
தக்காளி – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
பட்டை – 1 அங்குல துண்டு
லவங்கம் – 3
ஏலம் – 2
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
மல்லி இலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு – 3/4 தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மஷ்ரூம் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி பச்சை பட்டாணியுடன் சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைத்து எடுத்து ஆற விடவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, பாதி மல்லி இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
அதன்பின்பு நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து நீர் பிரிந்து வற்றும் வரை வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து வதக்கி 5 நிமிடம் வேக விடவும்.
கீரை நன்கு வெந்த பின்பு, தக்காளி சேர்த்து பிரட்டி, கரம் மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். பிறகு ஆற வைத்த சாதத்தை வதக்கியவற்றுடன் சேர்த்து கலக்கி மல்லி இலை தூவி 5 நிமிடம் மூடி வைத்து சிம்மில் வைக்கவும்.
இப்போது சுவையான மஷ்ரூம் பாலக் பிரியாணி ரெடி. இதனை சூடாக உருளைக்கிழங்கு வறுவலுடன் பரிமாறவும்