![தாய்மார்கள் கவனத்திற்கு.. சிலிண்டர் வாங்கும் போது கண்டிப்பாக இதை கவனித்து வாங்குங்கள்! 1 gas](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/gas.jpg)
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு, உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது.
வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடித்து விபத்துகள் ஏற்படுகிறது. மக்கள் பொதுவாக கேஸ் சிலிண்டர் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
குறிப்பாக, காலாவதியான சிலிண்டர்களால் தான் சிலிண்டர் விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கான முக்கிய காரணம் சிலிண்டர் காலாவதியான தேதியை மக்கள் கவனிப்பதில்லை. சிலிண்டர் வெடிவிபத்துக்கு அவையும் ஒரு காரணமாக இருப்பதால் மக்கள் அது குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்ள உங்கள் கேஸ் சிலிண்டர்களில் உள்ள தலை பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் இதில் மிக முக்கியமானது.
![தாய்மார்கள் கவனத்திற்கு.. சிலிண்டர் வாங்கும் போது கண்டிப்பாக இதை கவனித்து வாங்குங்கள்! 2 gas](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/gas.jpg)
எரிவாயு சிலிண்டர்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும், சில நேரங்களில் கேஸ் சிலிண்டர் கசிவு வெடிப்புக்கு வழிவகுக்கும்.
எரிவாயு சிலிண்டர்களை பெறும்போது, அது எங்கேயும் உடைந்துள்ளதா இல்லையா என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதேபோல், கேஸ் சிலிண்டரில் உள்ள எண்ணையும் கவனிக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டரில் ஏதேனும் எண் அல்லது குறியீடு எழுதப்பட்டிருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்கள் என்றால், அதன் பின்னணியில் உள்ள அர்த்தத்தையும் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
சிலிண்டரின் உடலை மேல் வளையம் அல்லது கைப்பிடியுடன் இணைக்கும் உலோக கீற்றுகளின் உள் பக்கத்தில் இந்த ‘எண் -எழுத்து’ எழுதப்பட்டுள்ளது. இது ஒரு எண்ணெழுத்து எண்,
அது A, B, C மற்றும் D ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரு எண் உடன் தொடர்கிறது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு வருடத்தின் கால் பகுதியைக் குறிக்கிறது.
உங்கள் சிலிண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள A என்ற எழுத்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களைக் குறிக்கிறது. அதேபோல், உங்கள் சிலிண்டரில் B என்ற எழுத்து காணப்பட்டால் அது ஏப்ரல், மே, ஜூன் என்ற அடுத்த மூன்று மாதங்களைக் குறிக்கிறது.
இதேபோல், உங்கள் எரிவாயு சிலிண்டரில் C என்ற எழுத்து காணப்பட்டால் அது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களை குறிக்கிறது என்பது பொருள். இறுதியாக D என்ற எழுத்து உங்கள் சிலிண்டரில் காணப்பட்டால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களை குறிக்கின்றது.
இது போக ஆங்கில எழுத்துடன் சேர்த்து ஒரு இரண்டு இலக்க எண்ணும் அந்த குறியீட்டில் இடம் பெற்றிருக்கும். அடுத்தபடியாக காணப்படும் எண் ஆண்டின் விபரத்தை குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக, உங்கள் சிலிண்டரில் B.24 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதி ஜூன் 2024 என்று அர்த்தம்.
மறுபுறம், இது C.22 ஆக இருந்தால், உங்கள் சிலிண்டர் செப்டம்பர் 2022 வரை இயங்கும் என்று அர்த்தம். அதன் பிறகு அதை மாற்ற வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.
அவ்வாறு செய்யத் தவறினால் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் ஒரு நுகர்வோர் B17 என்ற எழுத்து கொண்ட சிலிண்டரைப் பெற்றால், உடனே டெலிவரி நபரிடம் கூறி, கட்டாயச் சோதனை நடத்தப்படாததால், மற்றொரு சிலிண்டரை கொடுக்கச் சொல்லி கேட்கலாம்.
ஆனால், இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடக்கும். காரணம், எரிவாயு நிறுவனங்கள் அனைத்து சிலிண்டர்களையும் அதன் காலாவதி காலத்திற்குள் கட்டாயமாக இரண்டு முறை சோதனை செய்து திறனைச் சரிபார்க்கின்றது.
நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் எந்த எல்பிஜி சிலிண்டரின் அதிகபட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். முதல் சோதனை 5 ஆண்டுகள் முடிந்த பிறகு நடத்தப்படும்.
அதேபோல், அந்த சிலிண்டரின் இரண்டாவது சோதனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும். இந்த சோதனை விவரம் தான் எண்ணெழுத்து வடிவில் உங்கள் சிலிண்டரின் மேற்புறத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சோதனை தேதிகளும் (15 ஆண்டு) கடந்துவிட்டால், அந்த சிலிண்டரை பெரும்பாலும் மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.
காலாவதியான சிலிண்டர்கள் எதிர்பாராத விதமாக உங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டால் உடனே அதை உரிய டெலிவரி நபரிடம் கொடுத்து மாற்றிவிடுங்கள்.
மேலும், சிலிண்டரின் வால்வு கசிகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும். பெரும்பாலான டெலிவரி நபர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் போது, அதன் வால்வுகளைச் சோதனை செய்த பின்னரே பயனர்களுக்கு வழங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.