![மாஞ்சா நூலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு! 1 manja](https://dhinasari.com/wp-content/uploads/2019/11/manja.jpg)
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டம் விட பயன்படுத்தப்படும் கண்ணாடி கூழ் கலவையால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் அறுபட்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதுவரை பலர் பலியாகி உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு டெல்லி தேசிய பசுமை தீப்பாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து கடந்த 2016ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எனினும், தடையை மீறி பட்டம் விடும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
![மாஞ்சா நூலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு! 2 manja 1 1](https://dhinasari.com/wp-content/uploads/2019/11/manja-1-1.jpg)
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே.மகன் அபிமன்யு. கோபால் இன்று தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், மோட்டார் சைக்களின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியுள்ளது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சென்றனர். அங்கு குழந்தை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.