வடகிழக்குப் பருவமழை தற்போது வரையில் 9 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது!
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் மழைப்பொழிவு வழக்கத்தை விட 9 சதவீதம் குறைந்திருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை மைய அலுவலகத்தில் அதன் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை பதிவான மழைப் பொழிவு குறித்த தகவல்களையும் வெளியிட்டார். அதில், வழக்கமான நிலையில் இருந்து தற்போது வரை 9 சதவீதம் குறைவாகவே பெய்திருப்பதாகக் கூறினார். இந்தச் சூழலில் வடகிழக்குப் பருவ மழை சென்னையை ஏமாற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர் மேலும் குறிப்பிட்ட போது… தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.