உலகம் முழுவதும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தகவல் வெளியிட்டது.
அத்தகைய படங்களைப் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பதைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது, பிறருக்கு அனுப்புவது, மொபைல் அல்லது கணினியில் வைத்திருப்பது குற்றம் என்றும் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி எச்சரித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, `ஆபாசப் படங்களைப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்’ என்கிற விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஆபாசப் படம் பார்த்த கல்லூரி மாணவர் ஒருவரைக் காவலர் மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியானது. இது போலீஸார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நெல்லையில் உள்ள மூன்றடைப்புப் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், காட்டுப் பகுதிக்குச் சென்று ஆபாச இணையதளங்களைப் பார்த்து வருவதாகப் புகார் எழுந்தது. கும்பலாகச் செல்லும் இளைஞர்களால் சமூக விரோதக் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இதைத் தெரிந்துகொண்ட ஒருவர் கல்லூரி மாணவர் ஒருவருக்குப் போன் செய்து, `நீ ஆபாசப் படம் பார்த்திருக்கிறாய். அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதனால் உன் அப்பா நம்பரைக் கொடு. இந்தக் குற்றத்துக்காக நீ 7,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்’ என மிரட்டும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியது.
அந்த நபர் மிரட்டும்போது பின்னணியில் காவல்துறையினரின் மைக் சத்தமும் கேட்டது.
இதுகுறித்து விளக்கம் கொடுத்த கூடுதல் டி.ஜி.பி ரவி, ` ஆபாசப் படம் பார்ப்பவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அதில் 3,000 பேர் கொண்ட பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு அழைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமே தவிர போனில் யாரும் மிரட்டமாட்டார்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், மாணவரை மிரட்டியது காவல்துறையைச் சேர்ந்தவர் அல்ல என்ற தகவலும் வெளியானது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவரை மிரட்டும் வகையில் பேசியது மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அதனால் அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவருக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்துவருகிறது.