மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98. உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன். இந்நிலையில் அவர் சனிக்கிழமை இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானதாக, அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1922 டிசம்பர் 19-ஆம் தேதி பிறந்த அன்பழகனின் இயற்பெயர் ராமையா. சுயமரியாதை இயக்க கொள்கைகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணத்தால் அன்பழகன் என பெயரை மாற்றிக்கொண்டார்.
1957-இல் திமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் மூலம் சென்னை எழும்பூரிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
1971-இல் கருணாநிதியின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பின் கல்வித்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றியவர்.
1984-ஆம் ஆண்டு ஈழத்தமிழர் கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதியுன், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர். சுயமரியாதைக் கொள்கைகளில் இருந்த போதும், திமுக.,வினரால் இனமான பேராசிரியர் என அன்போடு அழைக்கப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1 முறை மேல்சபை உறுப்பினராகவும், 1 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு திமுக.,வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக., கட்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப் படுவதாகவும், ஏழு நாட்களுக்கு திமுக., கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப் படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.