துபாயிலிருந்து நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட 2.32 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை வந்த ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சுங்கத்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் ஒரு இருக்கைக்கு கீழ் 1.16 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன.அதே விமானம் சென்னையிலிருந்து உள்நாட்டு விமானமாக மாலை 6:30 மணிக்கு கவுஹாத்தி சென்று மீண்டும் மறுநாள் அதிகாலை சென்னை வருவது வழக்கம்.
இதனால் உள்நாட்டு பயணியாக யாராவது தங்கம் கடத்தலாம் என சந்தேகித்த அதிகாரிகள் கவுஹாத்தியில் இருந்து அந்த விமானம் சென்னை வந்த போது பயணியரை சோதித்தனர்.
இதில் ஏற்கெனவே 1.16 கிலோ தங்கம் இருந்த இருக்கையில் பயணித்த நபரிடம் மேலும் 1.16 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகபத் கான் 56 என தெரியவந்தது. மொத்தம் 1.14 கோடி ரூபாய் மதிப்பிலான 2.32 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் தொடர்புடைய கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்