மதுரையில், 3 வயது மகளை விஷம் கொடுத்து கொன்று, தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மதுரை, மகால் பந்தடி தெருவில் வசிப்பவர் விஜய குமார், 41. மஞ்சணக்காரத் தெருவில், தந்தை மற்றும் சகோதரருடன், நகை பட்டறை தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை, 9:30 மணிக்கு, கருப்பையா என்பவர், விஜயகுமாரை சந்திக்க வீட்டிற்கு வந்தார்.கதவு, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் திறக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது, விஜயகுமார், அவரது மனைவி வாணி, 38, ஆகியோர் துாக்கில் தொங்கினர். 3 வயது மகள் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் கூறியதாவது:தனக்கு கடன் கொடுத்த கருப்பையாவை, காலையில் விஜயகுமார் வரச் சொல்லியுள்ளார். அவர் வந்தபோதுதான், தற்கொலை விபரமே வெளியே தெரிந்தது.
ஏலத்திற்கு வரும் நகைகளை வாங்கி விற்பது, விஜயகுமார் வழக்கம். அப்படி வாங்கியபோது, அதில் போலி நகைகளும் இருந்துள்ளன. இதனால் அவருக்கு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
வாங்கியவர்களிடம் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. 50 லட்சம் ரூபாய் வரை, கடன் இருக்கலாம் என, உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.